Publish Date: Wed, 18 Nov 2020 (11:12 IST)
Updated Date: Wed, 18 Nov 2020 (11:14 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனா – இந்தியா இடையே எல்லை பிரச்சினை எழுந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியாவிற்கு உதவுவதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ப்ரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய சீன அதிபர் “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் அனைத்து நாடுகளும் உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவாக இருக்க வேண்டும். சீனா ஏற்கனவே ரஷ்யா, பிரேசில் நாடுகளுடன் தடுப்பூசி கண்டுபிடிக்க உதவி வருகிறது. அதேபோல இந்தியா, தென் ஆப்பிரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய – சீன எல்லை பிரச்சினையால் சீன பொருட்கள் மற்றும் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவை சமாதானம் செய்வதற்காக சீனா உதவிகரம் நீட்டுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவின் உதவியை இந்தியா ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.