சமூக வலைத்தளங்களில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருப்பதாகவும், அன்றைய தினம் பூமி ஆறு நிமிடங்கள் இருளில் மூழ்கும் என்றும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என நாசா விளக்கம் அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி எந்தவிதமான வானியல் நிகழ்வும் இல்லை என்று நாசா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும், ஆன்லைனிலும் பரவி வரும் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தியே என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது.
உண்மையில், நாசா குறிப்பிட்டுள்ளபடி, 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதிதான் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த நிகழ்வின் போது, நிலவின் நிழல் தெற்கு ஸ்பெயின் வழியாக வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளை கடந்து செல்லும். இது பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை காணப்படும் ஒரு அரிய வானியல் காட்சியாக இருக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தச் சூரிய கிரகணம்தான் ஆறு நிமிடங்களுக்கும் மேலாக நீடிக்கும் என்றும், கிரகணம் முழுமையாக நிகழும் நாடுகளில் பகல் வேளையிலும் இருள் சூழ்ந்து காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிகழ இருக்கும் இந்த நிகழ்வு குறித்த தவறான தகவலை, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குரியது என்று இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற தவறான தகவல்களை புறந்தள்ளி, அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என வானியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.