Publish Date: Wed, 14 Aug 2024 (10:42 IST)
Updated Date: Wed, 14 Aug 2024 (10:44 IST)
தனது பதவி இழப்பிற்கு அமெரிக்கா தான் காரணம் என முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டிய நிலையில் அவரது குற்றச்சாட்டு நகைச்சுவைக்குரியது என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவி விலகலில் அமெரிக்காவின் தலையீடு உள்ளது என்றும், மார்ட்டின் தீவுகளையும் வங்காள விரிகுடாவையும் அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் என்னால் பதவியில் நீடித்திருக்க முடியும் என்றும், ஆனால் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்பதால் தான் அமெரிக்கா சதி செய்து எனது பதவியை பறித்துவிட்டது என்றும் கூறியிருந்தார்.
ஷேக் ஹசீனாவின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஷேக் ஹசீனாவின் கருத்துக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வேதாந்தா படேல் கூறியபோது, ஷேக் ஹசீனாவின் கருத்துக்கள் நகைச்சுவைக்குரியது. ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவில் அமெரிக்காவுக்கு தொடர்பு உள்ளது என்பது முற்றிலும் தவறான தகவல், தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்பட்டு வருவதை அமெரிக்கா கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.