Publish Date: Fri, 27 Oct 2023 (19:11 IST)
Updated Date: Fri, 27 Oct 2023 (19:12 IST)
ட்விட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையில் இந்த ஒரு வருடத்தில் ட்விட்டர் பயன்பாடு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனத்தின் வர்த்தகம், நம்பகத்தன்மை குறைந்து விட்டதாகவும் அதனால் தான் பயனாளிகள் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
எலான் மஸ்க் அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4400 கோடி டாலருக்கு ட்விட்டரை வாங்கிய நிலையில் அதன் பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இந்த நிலையில் பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகளை நீக்குவது, இலவசமாக பயன்படுத்தி வந்த ட்விட்டர் கணக்குகளுக்கு கட்டணம் நிர்ணயித்தல், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் அங்கீகாரத்தை பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அறிவித்தல் உள்பட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் ட்விட்டர் பயனாளிகளுக்கு விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் பகிர்ந்தார். இருப்பினும் ட்விட்டர் பயன்பாடு கடந்த ஒரு ஆண்டில் பெரும் அளவு குறைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தான் என்று கூறப்படுகிறது...