நான் தான் பகையை தீர்த்து வைத்தேன், அதனால் இந்தியா வரியை குறைக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய கருத்து, வர்த்தக உலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுடன் பதற்றம் ஏற்பட்டபோது, “இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய வேண்டி, போர் செய்யவில்லை” என்ற அவரது முந்தைய கூற்று வாக்குவாதத்திற்கும் விமர்சனங்களுக்கும் இடமளித்தது.
இந்நிலையில், “இந்தியா, அமெரிக்கா தயாரிக்கும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரியை குறைக்க விரும்புகிறது” என டிரம்ப் கூறியிருக்கிறார். இது மேலும் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என வர்த்தக நிபுணர்களும் கூறுகின்றனர்.
ஓர் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், “அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து நல்ல அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா பாகிஸ்தான் பகையை நான் தீர்த்து வைத்தேன். அதனால் இந்தியா வரிக்குறைப்புக்கு முன் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான பேச்சுவார்த்தையை எடுத்துக்காட்டிய டிரம்ப், “அவர்கள் இறக்குமதி வரிகளை குறைத்தனர். இல்லையெனில், அவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா உண்மையில் அமெரிக்கா மீது வரிகளை குறைக்கப்போகிறதா என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியானதில்லை. இதனால், டிரம்ப் கூறியதானது உண்மையா, இல்லையா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.