காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் பிரிந்ததிலிருந்தே காஷ்மீர் பிரச்சனை இரு நாடுகளுக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு வலுவான, அசைக்க முடியாத சக்தி வாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி. அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்ததில் பெருமைப்படுகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த இரண்டு பெரிய நாடுகளுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக, காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார். பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தயாராக இருக்கிறேன்,” என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தியதாக அறிவித்தவுடன், இரு நாடுகளுக்கும் டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது காஷ்மீர் பிரச்சனையையும் முடித்து தருவதாக அவர் கூறியிருக்கும் நிலையில், அதனை இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.