27 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொடூரமான விமான விபத்தில் உயிர் பிழைத்த தாய்லாந்து நடிகர் ரூங்ஸாக் லோய்ச்சுசாக், சமீபத்திய ஏர் இந்தியா விபத்து பற்றி அறிந்ததும் சிலிர்த்துப் போனார். காரணம், ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு நபரான விஷ்வாஷ் குமார் ரமேஷ், தாம் விபத்துக்குள்ளானபோது அமர்ந்திருந்த அதே 11A இருக்கையில்தான் அமர்ந்திருந்தார்!
1998 டிசம்பர் 11 அன்று தாய் ஏர்வேஸ் TG261 விமான விபத்தில் 101 பேர் இறந்தபோது, 20 வயதான ரூங்ஸாக் உயிர் தப்பினார். இப்போது 47 வயதாகும் அவர், ரமேஷ் 11A இருக்கையில் இருந்ததை கேட்டுப் பெரும் வியப்பில் ஆழ்ந்தார். "நானும் அதே 11A இருக்கையில் அமர்ந்திருந்தேன் என்று தனது ஃபேஸ்புக் பதிவில் ரூங்ஸாக் குறிப்பிட்டுள்ளார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில விநாடிகளிலேயே போயிங் ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 242 பேரில் ரமேஷ் மட்டுமே உயிர் பிழைத்தார். ரூங்ஸாக், தன் பழைய போர்டிங் பாஸ் இல்லாவிட்டாலும், செய்தித்தாள்கள் தன் இருக்கை எண் மற்றும் உயிர் பிழைத்ததை உறுதிப்படுத்துகின்றன என்றார். விபத்துக்குப் பின் 10 ஆண்டுகள் விமானத்தில் பயணிக்காத அவர், இந்த சம்பவத்தை "இரண்டாவது வாழ்க்கை" என குறிப்பிடுகிறார்.
அவசரகால வெளியேறும் வாயிலுக்கு அருகில் அமர்ந்திருந்ததால், ரமேஷ் விபத்தின்போது விமானத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார். பலத்த காயங்களுடன், இடிபாடுகளிலிருந்து நடந்து வந்து ஆம்புலன்ஸில் ஏறியுள்ளார். "நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை," என ரமேஷ் மருத்துவமனையிலிருந்து கூறினார்.
இந்த 11A இருக்கையின் அற்புதம், அவசரகால வெளியேறும் இருக்கைகள் மீதான ஆர்வத்தை தூண்டி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.