கொலம்பியா நாட்டில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளரை ஒருவர் மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லத்தின் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தற்போதைய அதிபராக குஸ்தாவ் பெத்ரோ செயல்பட்டு வரும் நிலையில், அவரது ஆட்சி காலம் முடிவடைய உள்ளதால் கொலம்பியாவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்காக மிகுவெல் உரிப் என்பவரும் போட்டியிட்டு வருகிறார்.
கொலம்பியாவின் பல்வேறு மாகாணங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மிகுவெல் உரிப் நேற்று போகோட்டாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் மிகுவெல் உரிப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் உரிப்பிற்கு தலையில் 2 பகுதிகளில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் கைது செய்த நிலையில் அது ஒரு மைனர் சிறுவன் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கொலம்பியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K