இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் போர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுடனான எல்லையை மூடிய இந்தியா, மேலும் பல தடைகளையும் விதித்துள்ளது. முக்கியமாக பாகிஸ்தானின் நீர் ஆதாரமாக உள்ள சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
பதிலுக்கு பாகிஸ்தானும் வான்வெளியை மூடியுள்ளதுடன், இந்தியாவை மிரட்டும் வகையில் பேசி வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜஜமாலி, பஹல்காம் தாக்குதல் குறித்த நியாயமான விசாரணை நடக்க சர்வதேச சமூகத்தின் பங்கு இருக்க வேண்டும் என்றும், இதில் சீனா, ரஷ்யா போன்ற சக்திவாய்ந்த நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் “எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. நதிநீரை அபகரிக்கவோம், தடுக்கவோ எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கையாகவே கருதப்படும். அதற்காக அணு ஆயுதம் உள்ளிட்டவற்றை கொண்டு முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும். எனினும் இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K