Publish Date: Wed, 02 Feb 2022 (09:12 IST)
Updated Date: Wed, 02 Feb 2022 (09:14 IST)
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 5 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தயக்கமின்றி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பல நாடுகள் தாமதம் செய்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக நாடுகள் எதுவும் முடிவை எடுக்கவில்லை.
இந்நிலையில் பைசர் நிறுவனம் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்டு அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்துள்ளது. இதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி முதல் நாடாக அமெரிக்கா இருக்கும் என கூறப்படுகிறது.