Publish Date: Thu, 14 May 2020 (20:04 IST)
Updated Date: Thu, 14 May 2020 (20:07 IST)
மும்பை சிறையில் எலித்தொல்லைகள் அதிகம் என்பதால் தன்னை நாடு கடத்த கூடாது என வைரவியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடினார். பின்னர் அவர் கடந்த ஆண்டு லண்டனில் பிடிபட்ட நிலையில் அவரை லண்டன் போலீசார் கைது செய்து வாண்ட்ஸ்வொர்த்' சிறையில் அடைத்தனர். மேலும் அவரை நாடு கடத்தும் வழக்கு லண்டனில் உள்ள, 'வெஸ்ட் மினிஸ்டர்' மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மும்பையின் ஆர்த்தர் ரோடு சிறையில் எலி தொல்லை மற்றும் பூச்சித் தொல்லைகள் அதிகம் இருக்கும் என்றும் அதனால் தன்னை நாடு கடத்த கூடாது என்றும் வாதாடினார். அதே காரணத்தை தான் விஜய் மல்லையாவும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
நிரவ் மோடியின் பதிலளித்த இந்திய தரப்பு மும்பை சிறையில் போதிய இட வசதி, காற்றோட்டம், சுகாதாரமான வளாகம், போதிய வெளிச்சம், மருத்துவ வசதிகள் இருப்பதாக கூறி இதுகுறித்த விரிவான வீடியோ பதிவுவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். மேலும் நிரவ் மோடி அடைக்கப்படும் பாராக் எண் 12 சிறையின் அளவு, காற்றோட்டம், டியூப் லைட்கள் எண்ணிக்கை அதில் உள்ளதாகவும், அந்த சிறை அறையின் உயரம் 20 அடி என்பதால் கோடையிலும் வெப்பமிருக்காது என தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது