Publish Date: Sat, 02 Oct 2021 (14:31 IST)
Updated Date: Sat, 02 Oct 2021 (15:50 IST)
மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கினி நாட்டின் முன்னாள் அதிபர் ஆல்ஃபா காண்டேவுக்கு எதிராக ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ கர்னல் மமடி டோம்பொயா, இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார்.
41 வயதான மமடி, தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ளதால், ஆப்பிரிக்காவின் இரண்டாவது இளம் தலைவராக அறியப்படுகிறார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற கினி ஆட்சிக் கவிழ்ப்பை சர்வதேச அரங்கில் பலரும் பரவலாக கண்டித்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் இரண்டு பன்னாட்டு அமைப்புகளான எகொவாஸ், ஆப்பிரிக்க ஒன்றியம் இரண்டுமே கினி நாட்டின் உறுப்புரிமையை இடைநீக்கம் செய்தன.
மேலும் எகோவாஸ் அமைப்பு மமடிக்கு எதிராக தடைகளை விதித்தது. புதிய அரசமைப்பு சட்டத்தை எழுதுவது, ஊழலை சமாளிப்பது , தேர்தல் முறையை மாற்றுவது, நம்பத்தகுந்த, வெளிப்படையான தேர்தலை நடைமுறைபடுத்துவது போன்ற பணிகள் மூலம் நாட்டை மறுகட்டுமானம் செய்வதே தன் நோக்கம் என புதிய அதிபர் கூறியதாக ஏ.எஃப்.பி முகமை குறிப்பிட்டுள்ளது.