Publish Date: Thu, 05 Sep 2024 (15:01 IST)
Updated Date: Thu, 05 Sep 2024 (15:04 IST)
ஷேக் ஹசீனா இந்தியாவிலிருந்து கொண்டு கருத்து தெரிவித்தால் அது அவருக்கும் நல்லதல்ல, வங்கதேச மற்றும் இந்தியாவின் உறவுக்கும் நல்லதல்ல என்று இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.
இந்த நிலையில் இந்தியாவிலிருந்து கொண்டே அவர் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பாக வங்கதேச மாணவர் போராட்டத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்ற முகமது யூனுஸ், ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் இருக்க விரும்பினால் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்து கொண்டு அவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பது யாருக்கும் வசதியானது அல்ல என்றும் அவர் இந்தியாவில் இருந்து கொண்டு தெரிவிக்கும் கருத்துக்கள் பிரச்சனையாக மாறுகிறது என்றும் அவர் அமைதியாக இருந்தால் நல்லது, இந்தியாவில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பது சரியல்ல என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.