இஸ்ரேல் ராணுவம் காசா மீது போர் நடத்தி வரும் நிலையில் உண்ண உணவு இல்லாமல் சிறுவன் மண்ணை தின்பதாக கெஞ்சும் வீடியோ வைரலாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் - காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு இடையே போர் மூண்ட நிலையில், காசா மீது தற்போது வரை இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் 55 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பலர் தங்க வீடுகள் இன்றி சொந்த நிலத்திலேயே அகதிகளாக மாறியுள்ளனர். காசா மக்களுக்காக உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளாக குடிநீர், உணவு, மருந்துகள் போன்றவற்றை வழக்கி வந்த நிலையில் அதையும் சமீபத்தில் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது.
இதனால் பாலஸ்தீன மக்கள் காசாவிற்குள்ளேயே பட்டினியால் மடிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக உதவிப் பொருட்களை உள்ளே அனுமதித்த இஸ்ரேல், அதை வாங்க ஓடிவரும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது.
இந்நிலையில் தற்போது சிறுவன் ஒருவன் பசியில் வேதனையில் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் அந்த சிறுவன் “ காசாவில் எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு ட்ரக்குகள் வருகின்றன. ஆனால் எங்களுக்கு உணவு கிடைப்பதில்லை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம்” என பேசுகிறான். இந்த வீடியோ பார்ப்போரை கலங்க செய்யும் வகையில் உள்ளதுடன் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K