Publish Date: Wed, 11 Sep 2024 (16:30 IST)
Updated Date: Wed, 11 Sep 2024 (16:33 IST)
பிரதமர் மோடியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த மாலத்தீவு பெண் அமைச்சர்கள் இருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளும் கடந்த பல ஆண்டுகளாக நல்லுறவில் இருந்த நிலையில் திடீரென மாலத்தீவில் முகமது முய்சு தலைமையிலான ஆட்சி வந்த பின்னர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் கூறப்பட்டது.
குறிப்பாக இந்திய பிரதமர் மோடி குறித்து மாலத்தீவை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதையே தவிர்த்தனர். இதனை அடுத்து இரண்டு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்தியா மாலத்தீவு ஆகிய இரு நாடுகளும் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வரும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மாலத்தீவு அதிபர் முகமது முயசு இன்னும் சில மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த இரண்டு மந்திரிகளும் ராஜினாமா செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.