ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 224 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரின்போது ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கிய ஈரான், அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இதை இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. இந்நிலையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை வீசி இஸ்ரேலின் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்களை தாக்கியது.
இதற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் தனது ஏவுகணைகளை ஈரான் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகரான தெஹ்ரான் மீது நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறை தலைவர் மற்றும் மூன்று மூத்த ஜெனரல்கள் உள்பட 224 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1277 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் பொதுமக்கள், ராணுவத்தினர் எவ்வளவு என்ற விகிதம் தெரிய வரவில்லை.
அதை தொடர்ந்து ஈரான் தாக்கும் அபாயம் உள்ளதால் இஸ்ரேல் தயார் நிலையில் உள்ளதுடன், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணைகள் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K