ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முக்கிய கடல்வழி மூடப்பட்டால், இந்தியா உட்பட பல நாடுகளில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயரும் அபாயம் உள்ளது.
உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. இது ஈரான், ஓமன், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் அமைந்துள்ள 30 கி.மீ. நீளமுள்ள ஒரு குறுகிய கடல் வழித்தடம். பாரசீக வளைகுடா, அரபிக் கடல், மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை இணைக்கும் இதன் வழியாக, உலக எரிபொருள் தேவையில் 20% பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஜலசந்தியை மூடுவதற்கான வாக்கெடுப்பு ஈரான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ஹோர்முஸ் ஜலசந்தியை மூடும் ஈரானின் நடவடிக்கையை ஊக்குவிக்க வேண்டாம் என சீனாவிடம் கேட்டு கொண்டார். இத்தகைய நடவடிக்கை ஈரானுக்கு பொருளாதார தற்கொலைக்குச் சமம் என்றும், இது அமெரிக்காவை விட மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையே அதிகம் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஒரு வாரத்திற்கும் மேலாக ஈரான்-இஸ்ரேல் போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், சனிக்கிழமை இரவு அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய அணுசக்தி உற்பத்தி தளங்கள் மீது பி-2 பாம்பர் விமானங்கள் மூலம் சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் தலையிட்டுள்ளதால், அமெரிக்கா தொடங்கிய இந்த போரை ஈரான் முடித்து வைக்கும் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.