Publish Date: Wed, 25 Oct 2017 (13:20 IST)
Updated Date: Wed, 25 Oct 2017 (13:25 IST)
காணாமல் போன இந்திய சிறுமியின் மரணத்திற்கு அவளின் வளர்ப்புத் தந்தையே காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த வெஸ்ஸி மாத்யூஸ் மற்றும் அவரது மனைவி சினி ஆகியோர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், 2 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரை சேர்ந்த ஷெரின் எனும் குழந்தையை தத்தெடுத்தனர்.
அந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி அவர் காணமல் போய்விட்டதாக தம்பதி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, பால் குடிக்க ஷெரின் அடம் பிடித்ததால் அவளை தெருவில் விட்டதாக வெஸ்ஸி கூறினார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர். மேலும், காணாமல் போன ஷெரினை அமெரிக்க போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஷெரின் காணமால் போனதாகக் கூறப்படும் சாலையின் கீழ் இருக்கும் குழியில் இருந்து அவளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆய்வின் அது சிறுமி ஷெரினின் உடல்தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, ஷெரினின் வளர்ப்பு தந்தை வெஸ்லியிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று வலுக்கட்டாயமாக ஷெரினுக்கு பால் கொடுத்த போது, புரையேறி, மூச்சு திணறல் ஏற்பட்டது. அதன் பின் உடலில் எந்த சலனும் இல்லை. நாடித்துடிப்பும் இல்லை. எனவே, அவள் இறந்து விட்டதாக நினைத்து உடலை அப்புறப்படுத்தினேன் என பகீர் வாக்குமூலத்தை அவர் அளித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.