Publish Date: Mon, 15 Jun 2020 (07:27 IST)
Updated Date: Mon, 15 Jun 2020 (07:30 IST)
ஊரடங்கால் வறுமை: சைக்கிள்களுக்கு மாறிய பொதுமக்கள்
இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த போதிலும் சில படிப்பினைகளை பொதுமக்களுக்கு உண்டாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆடம்பர செலவுகள், அனாவசிய செலவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் பொதுமக்கள் வேலை இழந்து வருமானமும் இல்லாமல் இருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவைகளை மட்டுமே வாங்க தற்போது முடிவு செய்து உள்ளனர். ஒருசில நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு அத்தியாவசியமற்ற பொருள்களின் விற்பனை கடைகள் திறந்து இருந்தபோதிலும் அந்த கடைகளில் சுத்தமாக வியாபாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக சைக்கிள்களின் பயன்பாட்டை பெருமளவு பொதுமக்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பைக், கார்களுக்கு பதிலாக பொது மக்கள் பெரும்பாலும் சைக்கிள்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சைக்கிள்களை பயன்படுத்துவதால் எரிபொருள் செலவு முற்றிலும் இல்லை என்பதோடு, உடற்பயிற்சியும் சேர்ந்து கொள்வதால் இதனை பலர் பயன்படுத்தி வருகின்றனர்
ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருப்பதால் எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும் பொதுமக்கள் சைக்கிள்களில் வேலைக்கு சென்று வருவதால் உடற்பயிற்சியாகவும், பணத்தை மிச்சப்படுத்தும் விதமாகவும் இருப்பதால் உலகம் முழுவதும் பெரும்பாலானோர் தற்போது சைக்கிளை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது
மேலும் சைக்கிளை பயன்படுத்துவதில் தனிமனித இடைவெளியும் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக சைக்கிள்களின் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சைக்கிள்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது