Publish Date: Tue, 09 Jul 2019 (16:13 IST)
Updated Date: Tue, 09 Jul 2019 (16:25 IST)
போலீஸ் ஸ்டேஷனுக்குள் பல நாட்களாக தங்கியிருந்த அணிலை, இரண்டு காவலர்கள் மிகவும் சிரமப்பட்டு பிடிக்க முயற்சிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூ ஹாம்ஸைர் நகரிலுள்ள, காவல் நிலையத்தின் வாகன நிறுத்தத்தில், ஒரு அணில் பல நாட்களாக தங்கி வந்தது. அந்த அணிலை விரட்டுவதற்கு போலீஸ் நிலையத்தில் உள்ள காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பின்பு ஒரு கட்டத்தில் தொல்லை அதிகமாகவே, அந்த அணிலை பிடிப்பதற்கான “ஆப்ரேஷன் ஸ்குர்ரில்” (ஆப்ரேஷன் அணில்) என்ற ஒன்றை காவல்துறை கையில் எடுத்தது. அந்த ஆப்ரேஷனுக்கு இரண்டு காவலர்களை நியமித்தது.
பின்பு அந்த நியமிக்கப்பட்ட காவலர்கள், பெரும்பாடுபட்டு அணிலை வெளியேற்றினர். ஆனால் அது எளிதான காரியமாக இல்லை. திருடனை கூட எளிதாக பிடித்துவிடுவார்கள் போல, ஆனால் இந்த அணிலை பிடிப்பதற்கு படாதபாடு பட்டனர்.
அவர்கள் அணிலை பிடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது அந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த ஆப்ரேஷனில், அணிலுக்கோ, அந்த போலீஸாருக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை என நகைச்சுவையாக போலீஸார்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.