தங்கையின் உடலுறுப்புகளை வெட்டி குப்பையில் வீசிய அண்ணன்!
தங்கையின் உடலுறுப்புகளை வெட்டி குப்பையில் வீசிய அண்ணன்!
Publish Date: Fri, 18 Aug 2017 (13:01 IST)
Updated Date: Fri, 18 Aug 2017 (13:04 IST)
இத்தாலி தலைநகர் ரோமில் 62 வயதான அண்ணன் ஒருவர் 59 வயதான தனது தங்கையை கொன்று அவரது உடலுறுப்புகளை வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை இரவு இளம்பெண் ஒருவர் தனது குடியிருப்பின் அருகே உள்ள குப்பை தொட்டியை கிளறியபோது அதில் மனித உடல் உறுப்பு ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து அந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த குப்பைத்தொட்டியில் இருந்து மனித தலை ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர். அதன் பின்னர் அருகில் உள்ள பிற குப்பைத்தொட்டிகளை சோதித்ததில் கை, கால்கள் உள்ளிட்ட மற்ற உடல் உறுப்புகளையும் போலீசார் கண்டெடுத்தனர்.
இதனையடுத்து விசாரணையை வேகமாக முன்னெடுத்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மௌரிசியோ டியொடல்லெவி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கொலை செய்யப்பட்டது தனது சகோதரி 59 வயதான நிகோலெட்டா டியொடல்லெவி என்பதையும் கூறியுள்ளார் அவர்.
இவர்கள் இருவரும் ஒரே குடியிருப்பில் தான் வசித்து வந்துள்ளனர். ஏதாவது குடும்ப பிரச்சனை காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டாலும் போலீசார் கொலைக்கான காரணத்தை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.