Publish Date: Thu, 31 Dec 2020 (18:11 IST)
Updated Date: Thu, 31 Dec 2020 (18:16 IST)
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஒரு ஆண்டு ஆகியும் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது என்பதும் இன்னும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் திணறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது திடீரென பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவியுள்ளது. இந்த வைரஸ் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரவி வருவதால் 2021 ஆம் ஆண்டும் மனித இனத்திற்கு ஒரு சிக்கலான ஆண்டாக அமைந்து விடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் உள்ளது
இந்த நிலையில் பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், தற்போது சீனாவிலும் பரவி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பிரிட்டனிலிருந்து சீனா வந்த 23 வயது இளம்பெண்ணுக்கு பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து இருக்கிறது
இருப்பினும் அந்த பெண்ணுக்கு பிரிட்டன் வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் அவரால் வேறு சிலருக்கும் பரவியிருக்கும் என்றும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் சீனாவில் தற்போது பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது