Publish Date: Mon, 06 Apr 2020 (08:00 IST)
Updated Date: Mon, 06 Apr 2020 (07:48 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து உட்பட ஒரு சில நாடுகளில் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் கொரோனாவால் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தினர்களையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதன்பின்னர் அவர் சிகிச்சைக்குப்பின் குணமாகி வீடு திரும்பினார் என்று தெரிந்ததே
மேலும் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு அரசை நடத்தி வந்தார்
இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய உடலுக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளது