Publish Date: Tue, 30 Oct 2018 (08:58 IST)
Updated Date: Tue, 30 Oct 2018 (09:02 IST)
துப்பாக்கி சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும், இலங்கை பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தவருமான அர்ஜூனா ரணதுங்காவை ரூ.5 லட்சம் ஜாமீன் பெற்று இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பநிலை நிலவி வரும் நிலையில் ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளரும் பெட்ரோலிய துறை அமைச்சருமான அர்ஜூனா ரணதுங்கா தனது அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரை உள்ளே நுழைய விடாமல் ஒருசிலர் கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனையடுத்து அர்ஜூனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மூவர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை காரணம் காட்டி அர்ஜுனா ரணதுங்கா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என அர்ஜூனா தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த இலங்கை நீதிமன்றம் அவரை ரூ.5 லட்ச ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.