தொடர்ந்து இந்தியாவை விமர்சிப்பதும், இந்தியா மீது வரி விதிப்பதுமாக இருந்து வந்த ட்ரம்ப், தற்போது இந்தியாவையும் ரஷ்யாவையும் தொடர்புப்படுத்தி நேரடியாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கு பரஸ்பர விதியை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவிற்கும் வரி விதித்திருந்தார். என்னதான் இந்தியா நட்பு நாடாக இருந்தாலும் அவர்கள் அமெரிக்காவிற்கு அதிகமான வரிகளை விதித்துள்ளனர் என்று தொடர்ந்து பேசி வந்தார். அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு உடன்பட்டால் இந்தியாவிற்கு வரியை குறைப்பதாக அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் வரிவிதிப்பை அதிகரிப்போம் என்றும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அமெரிக்கா பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்து பாகிஸ்தானில் கச்சா எண்ணெய் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்தியா - ரஷ்யாவை நேரடியாக இணைத்து தாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
அந்த பதிவில் அவர் “ரஷ்யாவுடன் இந்தியா என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஏற்கனவே வீழ்ந்து கொண்டிருக்கும் தங்கள் பொருளாதாரத்தை மேலும் கீழே தள்ளுவதை பார்த்து நான் கவலை அடைகிறேன். நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வணிகத்தைச் செய்துள்ளோம், அவர்களின் கட்டணங்கள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. அதேபோல், ரஷ்யாவும் அமெரிக்காவும் கிட்டத்தட்ட எந்த வணிகத்தையும் ஒன்றாகச் செய்யவில்லை.
அதை அப்படியே வைத்திருக்கலாம், மேலும் ரஷ்யாவின் தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி, தான் இன்னும் ஜனாதிபதி என்று நினைக்கும் மெட்வெட் அவரது வார்த்தைகளைக் கவனித்து பேச வேண்டும். அவர் மிகவும் ஆபத்தான பிரதேசத்திற்குள் நுழைகிறார்!” என்று கூறியுள்ளார்.
நாளை முதல் (ஆகஸ்டு 1) இந்தியாவிற்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ள நிலையில் இதுகுறித்து இந்தியா தரப்பில் எந்த நகர்வும் இல்லாதது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K