Publish Date: Mon, 22 Apr 2019 (07:32 IST)
Updated Date: Mon, 22 Apr 2019 (07:36 IST)
நேற்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தால் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 500 பேர் இந்த குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இலங்கையின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ஜனாதிபதி சிறிசேனா பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் சற்றுமுன் கொழும்பு விமானநிலையத்தில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொழும்பு பண்டார நாயக சர்வதேச விமானநிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், சக்திவாய்ந்த அந்த வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது