Publish Date: Thu, 18 Jul 2024 (08:15 IST)
Updated Date: Thu, 18 Jul 2024 (08:16 IST)
ஓமன் அருகே கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பலில் இருந்து 8 இந்தியர்கள் உள்பட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் காணாமல் போன 5 இந்தியர்கள் உள்பட 7 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஓமன் நாட்டு கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 13 இந்தியர்கள் மற்றும் மூன்று இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனை அடுத்து கப்பலில் இருந்து காணாமல் போன இந்தியர்களை மீட்பதற்காக இந்திய போர் கப்பல் மற்றும் விமானம் ஓமன் கடல் பகுதிக்கு விரைந்ததாக ஏற்கனவே வெளியான தகவலை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ஓமன் விபத்தில் சிக்கிய 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் இதில் எட்டு பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மீதமுள்ள ஐந்து இந்தியர்கள் உட்பட ஏழு பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்களையும் விரைவில் மீட்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்திய போர்க்கப்பல் மற்றும் விமானம் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அனைவரும் மீட்டு விடுவோம் என்றும் இந்திய ராணுவத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.