Publish Date: Thu, 07 Feb 2019 (11:47 IST)
Updated Date: Thu, 07 Feb 2019 (11:48 IST)
இந்த மாத இறுதியில் நடக்க இருக்கும் 91 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இல்லாமல் நடக்கும் என ஆஸ்கர் கமிட்டி அறிவித்துள்ளது.
உலகளவில் வழங்கப்படும் திரை விருதுகளில் ஆஸ்கர் விருது மிக முக்கியமான விருது. ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களுக்கு பலப் பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுப் படங்களுக்கும் தனிப்பிரிவில் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக் கடந்த 90 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 91 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ஆஸ்கர் கமிட்டி, விழா இம்முறை தொகுப்பாளர் இல்லாமலேயே நடக்கும் என அறிவித்துள்ளார்.
முன்னதாக விழாவினை ஹாலிவுட் நடிகர் ஹெவின் ஹர்ட் தொகுத்து வழங்குவதாக இருந்தது. ஆனால் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் LGBT சமூகத்தினர் குறித்து தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்து மக்கள் அவருக்கு எதிராகக் குரலெழுப்பினர். இதனால் மன்னிப்புக் கேட்ட ஹர்ட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பில் இருந்தும் விலகிக்கொண்டார். அதையடுத்து மாற்று தொகுப்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது தொகுப்பாளர் இல்லாமலேயே விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தொகுப்பாளர் இல்லாமல் விழா நடைபெறுகிறது.