Publish Date: Thu, 28 Aug 2014 (13:25 IST)
Updated Date: Thu, 28 Aug 2014 (13:27 IST)
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா
- ஒளவையார்.
`விநாயகன்' என்றால் முதல்வன் என்று பொருள். நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும், வேறு எந்தக் கடவுளுக்குப் பூஜை செய்தாலும், முதலில் விநாயகரை நினைத்து வழிபட்ட பின்னரே மற்ற கடவுள்களுக்குப் பூஜை செய்கிறோம். விநாயகரின்றி எதுவும் நடைபெறாது.
தவிர நம்முடைய வினைகளுக்கு தடையாக இருப்பவற்றை தகர்த்து சித்தியும், புத்தியும் வழங்க வல்லவர் கஜமுகன் - கரிமுகன் என்ற ஐங்கரத்தான்.
விநாயகர் என்ற சொல்லுக்குத் `தனக்கு மேலே வேறுதலைவர் இல்லாதவர்' என்றும் ஒரு பொருள் உண்டு. விநாயகர், தேவர்கள் எவருக்கும் இல்லாத தனித்த ஆற்றல் கொண்டவர்.
யாதொரு வினைக்கும் முன் விநாயகர் வழிபாடு
விநாயகருக்கு பல பெயர்கள் இருந்தாலும், அவர் யானைமுகத்தோற்றம் உடையவரே ஆவார். ஒவ்வொரு பெயருக்கும் காரணங்களும் உண்டு. கணபதி என்ற பெயருக்கு `கணங்களுக்கு' எல்லாம் அதிபதி - தலைவர் என்று பொருள். விநாயகரின் தந்தை சிவபெருமான். அவரைச் சுற்றியிருப்பது பூதகணங்கள். சிவனை வணங்க வருவோர் தேவகணங்கள். அசுர கணங்களின் ஒப்பற்ற கடவுளும் சிவபெருமானே.