Publish Date: Wed, 11 Feb 2015 (09:38 IST)
Updated Date: Wed, 11 Feb 2015 (09:40 IST)
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - 2 கப் ( இட்லி அரிசி )
உளுத்தம்பருப்பு - அரை கப்
சிகப்பு மிளகாய் - 8
உப்பு - ருசிக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் - அரை கப் ( பல்பல்லாக நறுக்கியது )
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை :
முதலில் புழுங்கலரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சிகப்பு மிளகாய், உப்பு சேர்த்து மை போல அரைத்து வைக்கவும். பின்னர் மறுநாள் உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து புழுங்கலரிசி மாவுடன் கலக்கவும்.
கடலைப் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து வடித்து அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்க்கவும்.
மேலும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பல் பல்லாக நறுக்கிய தேங்காய் கீற்று சேர்த்து மாவைக் கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி ஒரு சிறிய நெல்லிக்காயளவு புளியை அதில் போடவும். புளி நன்றாக கருகியதும் வெளியே எடுத்துவிடவும். சிறிய போண்டாக்களாக மாவை கைகளால் கிள்ளி எடுத்து எண்ணெயில் போடவும்.
பொன்னிறமாகப் பொரித்து சூடாக சட்னியுடன் பரிமாறவும்.