Publish Date: Wed, 16 May 2018 (07:20 IST)
Updated Date: Wed, 16 May 2018 (07:23 IST)
கர்நாடக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் முழுமையாக வந்துவிட்ட நிலையில் அம்மாநிலத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தாலும், அக்கட்சி ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்.எல்.ஏக்கள் தேவை.
அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இணைந்தால் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார் என்ற முடிவு தற்போதைக்கு கவர்னர் கையில்தான் உள்ளது.
கவர்னர் வஜுபாய் வாலா மோடியின் குஜராத் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவர் பாஜக ஆதரவான முடிவை எடுப்பார் என்றும், தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜகவை ஆட்சி அமைக்க அவர் அழைப்பார் என்றும் கூறப்படுகிறது. அப்படி கவர்னர் பாஜகவை அழைத்தால் நிச்சயம் எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் பேசப்பட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் 117 எம்.எல்.ஏக்கள் உள்ள காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தால் எளிதில் மெஜாரிட்டி நிரூபிக்கப்படும். இனி நடக்கப்போவது என்ன என்பது கவர்னர் எடுக்கும் முடிவில்தான் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.