Publish Date: Thu, 07 Jun 2018 (17:06 IST)
Updated Date: Thu, 07 Jun 2018 (17:09 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 12வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றவர் கீர்த்தனா. தாய், தந்தை இருவருமே டாக்டர்களாக இருக்கும் குடும்பத்தில் பிறந்த கீர்த்தனா, சிபிஎஸ்.இ பள்ளியில் படித்ததால் எளிதாக நீட் தேர்வில் மார்க் அதிகமாக எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து கருத்து கூறிய கீர்த்தனா, 'நீட் தேர்வுக்கு சரியான முறையில் பயிற்சி பெற்றால் எல்லோருக்கும் எளிதாகத்தான் இருக்கும் என்று கூறினார். அவருடைய இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
நீட் தேர்வால் அனிதா, பிரதீபா ஆகிய உயிர்கள் பலியாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வை ஆதரித்து பேசுவது தவறு என்று நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வந்தனர். இதற்கு அனிதா அண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியதாவது:
கீர்த்தனா நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி (அவரும் என் தங்கை தான்)
இரண்டு வருடங்கள் நீட் கோச்சிங் சென்று கஷ்டப்பட்டு தான் படித்து முதலிடம் பெற்றுள்ளார்..
அப்பா,அம்மா இருவரும் மருத்துவர் என்பதால் பணம் கட்ட கஷ்டமாக இருந்திருக்காது, அனிதாவிற்கும் கீர்த்தனாவிற்குமான சூழல் இடைவெளி மிகப்பெரியதுதான்,
ஆனால் படித்து மதிப்பெண் பெற வேண்டும் என்ற தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார், அதற்காக வாழ்த்தப்பட வேண்டியவர், பாராட்டப்பட வேண்டியவர்..
ஏதோ அவர்தான் அனிதாவையும், பிரதீபாவையும் கொலை செய்தார் என்பது போன்று இருவரையும் ஒப்பிட்டு புகைப்படத்துடன் பதிவுகள் வருவது வருத்தமளிக்கிறது..
பல்வேறு வகையான கல்விமுறைகளை ஏற்படுத்தி மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் அரசுதான் குற்றவாளி...