Publish Date: Tue, 14 Aug 2018 (08:04 IST)
Updated Date: Tue, 14 Aug 2018 (08:06 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுபோல் திமுகவிலும் மு.க.அழகிரியால் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். இதன்படியே நேற்று தனது ஆதங்கத்தை தெரிவித்த அழகிரி, இன்னும் இரண்டு நாட்களில் முக்கிய முடிவு எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று கூடவுள்ள திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், எடுக்கப்படும் முடிவுகளை அடுத்தே அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அழகிரியின் நோக்கம் திமுகவில் இணைவதோ, கட்சியின் பதவியை பெறுவதோ இல்லை என்றும், திமுகவின் கைவசம் உள்ள இரண்டு பெரிய அறக்கட்டளையில் முக்கிய பதவி பெற்று அறக்கட்டளையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதே என்று அரசியல் விமர்சகர் ஒருவர் நேற்று தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசியுள்ளார்.
ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்து கெட்ட பெயர் வாங்கி, திமுகவை உடைப்பதைவிட அறக்கட்டளையை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம் என்றே அழகிரி நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதெல்லாம் வெறும் யூகங்கள்தான். அழகிரியின் மனதில் உண்மையில் என்ன இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்