Publish Date: Tue, 12 Mar 2019 (22:16 IST)
Updated Date: Tue, 12 Mar 2019 (22:17 IST)
பொள்ளாச்சியில் கடந்த பல ஆண்டுகளாக இருபதுக்கும் மேற்பட்ட ஒரு கும்பல், சுமார் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சீரழித்து, ஆபாச வீடியோ எடுத்த கொடுமை இத்தனை வருடங்களாக வெளிவராமல் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாட்சியில் நடந்துள்ள இந்த கொடூரம் போல் இன்னும் எத்தனை ஊரில் எத்தனை கும்பல் நடத்தி வருகின்றார்களோ தெரியவில்லை. காவல்துறை ஒரு அளவுக்குத்தான் பாதுகாப்பு கொடுக்க முடியும். அப்பாவி இளம்பெண்கள் கயவர்களிடம் சிக்காமல் இருக்க நாமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதைவிட முக்கியமாக ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பையனை வளர்க்கும்போது சில விஷயங்களை புரிய வைக்க வேண்டும். பெண் என்பவர் ஒரு போகப்பொருள் அல்ல, போற்றத்தக்கவர் என்பதை குழந்தையில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
இந்த நிலையில் நடிகர் சிம்பு இன்று ஒரு விழாவில் பேசியபோது, 'உங்க பிள்ளைங்ககிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் தினமும் பேசுங்க. உனக்கு விருப்பமில்லாத பெண்ணை தொட்றது உங்க அம்மாவ தொட்ற மாதிரின்னு அவனுக்கு சொல்லி கொடுங்க. இதைமட்டும் சொல்லி பாருங்க ஒருத்தன் ஒரு பொண்ணை கூட தொட மாட்டான்.
பெரும்பாலான பெற்றோர்கள் இதை பற்றி பேசுவதற்கு அசிங்கப்பட்றாங்க. அருவருப்பு படக்கூடாது. தினமும் பசங்ககிட்ட மனம் விட்டு பேசுங்க. பொறக்கும்போது எந்த குழந்தையும் கெட்டவனா பொறக்குறது இல்லை. வளர்க்கும்போது சரியா சொல்லிக்கொடுத்து வளர்த்தா உலகத்தில கெட்டவங்களே இருக்க மாட்டங்க என்று பேசினார். சிம்புவின் இந்த பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.