Publish Date: Tue, 13 Feb 2018 (11:13 IST)
Updated Date: Tue, 13 Feb 2018 (11:15 IST)
போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கடந்த 6ம் தேதி இரவு சென்னை பூந்தமல்லை அருகே உள்ள ஒரு லாரி செட்டில் போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் விழாவில் 71 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ஆனால், பினு தப்பி சென்றுவிட்டார். அவர் மீது 3 கொலை மற்றும் ஆள்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.
அதேபோல், அங்கிருந்து தப்பிய ரவுடி பினு தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு தப்பி சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பினுவை சேர்த்து தப்பி சென்ற மற்ற ரவுடிகள் அனைவரும் தங்களை பாதுகாக்க கொலையும் செய்வார்கள் என்பதால், தேவைப்பட்டால் அவர்கள் சுட்டுப்பிடிக்கவும் தனிப்படையினருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டது. அதனால், 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ரவுடி பினு அம்பத்தூர் காவல்துணை ஆணையர் முன்னிலையில் தற்போது சரணடைந்துள்ளார். துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், உயிருக்கு பயந்து அவர் சரணடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.