Publish Date: Wed, 15 Aug 2018 (08:44 IST)
Updated Date: Wed, 15 Aug 2018 (08:45 IST)
இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடியை சற்றுமுன் ஏற்றி வைத்தார். கொடியேற்றி வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா இப்போது 6வது இடத்தில் உள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இந்தியா பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா என்பது இந்தியர்கள் அனைவருக்குமானது என்பதை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
பாஜக ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் பல ஐஐடிக்களை உருவாக்கியுள்ளோம். மேலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை இந்த அரசு வாங்கி தந்துள்ளது. அம்பேத்கார் எழுதிய அரசியலமைப்பு சட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் களங்கரை விளக்கமாக உள்ளது.
நாடு பேரிடர்களை சந்தித்த காலத்தில் கருணையுடனும், போர்க்காலத்தில் ஆக்ரோஷத்துடனும் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் உள்ளனர். இந்திய எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் பக்கபலமாக இருப்பதே நமது மிகப்பெரிய பலம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் நீலகிரி மலையில் பூத்துள்ளன. அந்த நீல நிற குறிஞ்சிப்பூக்கள் மூவர்ண கொடியில் உள்ள அசோக சக்கரத்தை ஞாபகப்படுத்துகின்றன என்று கூரிய பிரதமர் எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும் என்னும் மகாகவி பாரதியின் கவிதையை தமிழில் பிரதமர் மோடி வாசித்து தனது உரையை முடித்தார்.