Publish Date: Sun, 27 May 2018 (11:10 IST)
Updated Date: Sun, 27 May 2018 (11:12 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை ஆளிங்கட்சியினர் யாரும் சென்று பார்க்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தனர். இது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பட்டது அதற்கு அவர், தூத்துகுடியில் 144 தடை போடப்பட்டிருக்கிறது, நான் சட்டத்தை மதிப்பவன். அதனால் செல்லவில்லை என்று பதில் அளித்தார். 144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது என்பது தெரியாமல் தமிழ்நாட்டு முதல்வர் இருப்பதை பலர் விமர்சனம் செய்தனர்.
தூத்துக்குடியில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிரிழந்த, காயமடைந்த மக்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் நேரில் சென்று ஆறுதல் கூற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடிக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.