Publish Date: Thu, 29 Nov 2018 (22:25 IST)
Updated Date: Thu, 29 Nov 2018 (22:27 IST)
வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர், அமைச்சர் விஜயபாஸ்கரை திடீரென சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று புதுக்கோட்டை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய அமைச்சர் விஜய்பாஸ்கர் வருகை தந்திருந்தார். அந்த நிலையில் விருந்தினர் மாளிகை அருகே காங்கிரஸ் கட்சியின் கொடி ஏந்திய கார்கள் நிற்பதை அமைச்சர் பார்த்தார். அதில் திருநாவுக்கரசரின் கார் இருந்ததை பார்த்த அமைச்சர், உடனே கீழே இறங்கி திருநாவுகரசர் எங்கே என கேட்டார்.
அதன் பின்னர் அங்கிருந்த வீட்டிற்குள் சென்ற அமைச்சர், திருநாவுக்கரசரை சந்தித்து ஐந்து நிமிடங்கள் பேசினார். இதனை காங்கிரஸ்கார்களே சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கரை வீட்டிற்கு வெளியே வரை வந்து திருநாவுக்கரசர் வழியனுப்பி வைத்தார். ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என சமீபத்தில் கூறி பரபரப்பை திமுக பொருளாளர் துரைமுருகன் ஏற்படுத்திய நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கரை திருநாவுக்கரசரை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.