Publish Date: Tue, 24 Apr 2018 (14:26 IST)
Updated Date: Tue, 24 Apr 2018 (14:29 IST)
காவிரி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகானிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை தடுக்க வந்த போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் போலீசாரையும் தாக்கினர். அப்போது, பாராதிராஜா, சீமான் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு, அதன் பின் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் விடுவிக்கப்படாமல் இருந்தார். போலீசாரை தரக்குறைவாக விமர்சித்ததால் அவரோடு, சிலரை சிறையில் அடைத்துவிட்டனர். அவரை விடுதலை செய்யக்கோரி சீமான், சிம்பு உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக புழல் சிறையில் இருந்த மன்சூர் அலிகானுக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் தற்பொழுது ஜாமீன் வழங்கியுள்ளது.