Publish Date: Fri, 23 Mar 2018 (14:22 IST)
Updated Date: Fri, 23 Mar 2018 (14:26 IST)
நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், சின்ன வயதிலேயே வீட்டைவிட்டுச் சென்றுவிட்டதாகவும் மதுரை மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். மாதா மாதம் தங்களுக்கு பராமரிப்புத்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில், தனுஷே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் என ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
அந்நிலையில், மதுரை உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் தம்பதியினர் மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘தனுஷின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு என வழங்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்துமே போலியானவை. அதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்தது” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.