Publish Date: Thu, 22 Nov 2018 (10:02 IST)
Updated Date: Thu, 22 Nov 2018 (10:03 IST)
கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏராளமான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்ததால் டெல்டா பகுதியின் பெரும்பாலான இடங்களில் இன்னும் மின் இணைப்பு சீரமைக்காமல் இருளில் உள்ளது.
மின்வாரிய ஊழியர்கள் இரவுபகலாக மின் சீரமைப்பு பணியை செய்துவந்தாலும் சேதத்தின் அளவு அதிகம் என்பதால் இன்னும் ஓரிரு நாட்கள் கழித்தே மின் இணைப்பு கிடைக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள மின் ஊழியர்களை தமிழகத்திற்கு அனுப்பி மின்சீரமைப்பு பணிக்கு உதவியுள்ளார். இந்த உதவியால் டெல்டா பகுதிக்கு மின் இணைப்பு விரைவில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மேலும் சில நிவாரண பொருட்களையும் கேரள முதல்வர் தமிழகத்திற்கு அனுப்பி உதவியுள்ளார்.
டெல்டா மாவட்டத்திற்கு கேரள முதல்வர் ஒருபக்கம் உதவி செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழகத்தை சேர்ந்த ஒரே மத்திய அமைச்சர் ஒருவர் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு சென்று அங்கு அரசுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் எதிராக செயல்பட்டு அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜகவினர் பலர் கேரள அரசை சபரிமலை விவகாரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கஜா புயல் பாதிப்பின் நிவாரண பணியை மேற்பார்வையிடாமல் கேரளாவை விமர்சித்து வரும் பாஜகவினர்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.