Publish Date: Mon, 28 May 2018 (08:13 IST)
Updated Date: Mon, 28 May 2018 (09:34 IST)
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில் அம்மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பதட்டம் நிலவியது. எனவே கலவரம் மேலும் பரவாமல் இருக்கவும், போராட்டம் குறித்த செய்திகள் பரவாமல் இருக்கவும் தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மட்டும் இணையதள சேவை தொடங்கப்பட்டது. மேலும் நேற்று முதல் தூத்துகுடியில் இயல்பு நிலை திரும்பி பேருந்துகள் இயங்க தொடங்கிய நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தூத்துகுடியிலும் இணையதள சேவை தொடங்கப்பட்டது.
5 நாட்களுக்கு பின்னர் இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது. அதேபோல் படுகாயமடைந்தவர்களுக்கு 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.