Publish Date: Tue, 01 May 2018 (10:45 IST)
Updated Date: Tue, 01 May 2018 (10:48 IST)
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தார். இதனால், காங்கிரஸ் திமுக கூட்டணி நிலைக்காது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சந்திரசேகரராவ் மூன்றாவது பெரிய தேசிய கட்சியை உருவாக்க முயற்சித்து வருகிறார். இவரோடு சேர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். எனவே, அதன் படி தமிழகத்திற்கு வந்து ஆதரவு கோரியதாக கூறப்பட்டு வரும் நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது, சந்திரசேகரராவ், மம்தா பானர்ஜியுடன் கூட்டணி சேருவதால் திமுகவுக்கு ஒரு பயனும் இல்லை. நாட்டில் மூன்றாவது அல்லது நான்காவது அணி ஆட்சியே அமைக்க முடியாது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியால்தான் பாஜக அரசை அகற்ற முடியும். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறவில்லை. மம்தா, சந்திரசேகர ராவ் கட்சிக்கு தமிழகத்தில் ஆட்களே கிடையாது.
எனவே, இவர்களுடன் கூட்டணி சேருவதால் திமுகவுக்கு எந்த பயனும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். கள நிலவரம் என்ன என்பது ஸ்டாலினுக்கு தெரியும் என திருநாவுக்கரசர் கூறினார்.