Publish Date: Sun, 29 Apr 2018 (12:23 IST)
Updated Date: Sun, 29 Apr 2018 (12:24 IST)
தனிக்கட்சி துவங்கியுள்ள திவாகரனுக்கு மனநலம் குன்றிவிட்டதாக, தினகரன் தெரிவித்துள்ளார்.
தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சசிகலா சிறை சென்றதற்கே தினகரன் தான் காரணம் என திவாகரன் குற்றம் சாட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திவாகரன், தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பேனே தவிர தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என கூறினார்.
இதனால் அவர் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திவாகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர் யாரையும் அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்டது.
இந்நிலையில் நேற்று மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.
சென்னை ஆர்.கே நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், திவாகரனுக்கு உடல்நிலை தான் சரியில்லை என நினைத்தேன், இப்பொழுது மனநலமும் குன்றிவிட்டது. அவர் யாருடைய தூண்டுதலின் பெயரில் இப்படியெல்லாம் செயல்படுகிறார் என்பது மக்களுக்கு விரைவில் தெரியவரும் என்றார்.