Publish Date: Wed, 11 Jul 2018 (19:54 IST)
Updated Date: Wed, 11 Jul 2018 (19:57 IST)
தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று பாஜக பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தாலும் பிரதமர் மோடி வரும்போதும் அமித்ஷா வரும்போது நெட்டிசன்களின் 'கோபேக்' டிரெண்ட்டால் பாஜகவினர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பாஜக மேலிடம் விசாரித்தபோது, அதிமுக ஆட்சியை நீடிக்க பாஜக உதவி செய்வதால்தான் மக்களுக்கு கோபம் என்றும், ஜெயலலிதா மறைந்தவுடனே தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை கொண்டு வந்திருந்தால் பாஜகவுக்கு இத்தனை எதிர்ப்பு இருந்திருக்காது என்பதும் தெரிய வந்ததாம்.
மேலும் பாஜகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் திமுக, அதிமுகவை பாஜக எதிர்க்க வேண்டும் என்றும் இந்த இரு திராவிட கட்சிகள் இல்லாத ஒரு கூட்டணியை அமைக்க தான் தயார் என்றும் ரஜினிகாந்த் பச்சைக்கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதன்பின்னர் தான் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்றும் தற்போதைய அரசு ஊழல் அரசு என்றும் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் ரஜினி கட்சி, பாஜக மற்றும் ஒருசில கட்சிகளின் கூட்டணி அமையும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் அதிமுக, திமுக இல்லாத ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும், அந்த கூட்டணியில் கமல், திருமாவளவன் கட்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது