Publish Date: Wed, 11 May 2016 (14:35 IST)
Updated Date: Wed, 11 May 2016 (14:41 IST)
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 283 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
ஏடிஆர் என்று அழைக்கப்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்தும் அந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் மொத்தம் 3776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். இதில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் வசந்த் & கோ நிறுவனருமான வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 337 கோடி.
அண்ணாநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.கே.மோகன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 170 கோடி. மூன்றவதாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், தமிழக முதல் ஜெயலலிதா இருக்கிறார். இவரின் சொத்துமதிப்பு ரூ. 113 கோடி.
அதேபோல், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்தும் அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மொத்த வேட்பாளர்களில் 283 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 157 பேர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. கட்சி வாரியாக பார்த்தால் திமுக 68, அதிமுக 47, பாமக 66, தேமுதிக 41, காங்கிரஸ் 10, பாஜக 26, மார்க்சிஸ்ட் 8 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. 28 தொகுதிகளில் மூன்றுக்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.