Publish Date: Wed, 31 Mar 2021 (11:44 IST)
Updated Date: Wed, 31 Mar 2021 (11:46 IST)
திமுகவை நம்பியவர்கள் தெருவில்தான் நிற்க வேண்டியது வரும் என டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
அதிமுக, திமுக கூட்டணியை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக உள்பட ஒருசில கட்சிகள் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து டிடிவி தினகரன் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது சமீபத்திய பிரச்சார கூட்டத்தில்,
தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்க தவியாய் தவிக்கிறது. 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் எனக்கூறும் திமுக, தபால் வாக்கு பெற காவலர்களுக்கு ரூ 2000 கொடுத்து அவர்களை பணி நீக்கத்திற்கு காரணம் ஆகிவிட்டார்கள். திமுகவிற்கு தேர்தல் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.
திமுகவை நம்பியவர்கள் தெருவில்தான் நிற்க வேண்டியது வரும். தப்பித்தவறி ஸ்டாலின் முதல்வரானால் கஜானாவில் ஒன்றுமில்லை, எனவே பொதுமக்கள் சொத்துக்களையும் எடுத்துச் சென்றுவிடுவார்கள். பத்து வருடமாக ஆட்சியில் இல்லை மக்களை சுரண்ட வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என விமர்சித்து பேசியுள்ளார்.