பொழுது போக்குப் பூங்காவான வி.ஜி.பி.யும், தினத்தந்தி நாளிதழும் இணைந்து நடத்தும் கோடை விழாவில் நாளை மாணவர்களுக்கான ஓவியப்போட்டி இடம்பெறுகிறது.
ஒவ்வொரு வருடமும் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் கோடைவிழா என்ற பெயரில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கொண்டாட்டங்கள் நாளை தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 31-ந்தேதி வரை ஆறு வாரங்கள் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு வகையான போட்டிகள் நடக்க இருக்கின்றன.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வார நிகழ்ச்சியாக ஓவியப் போட்டி நடக்க இருக்கிறது. வி.ஜி.பி. தங்க கடற்கரையில் உள்ள சந்தனமகாலில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 5 முதல் 10 வயது வரையுள்ள சிறுவர் - சிறுமிகள் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்கிறவர்கள் போட்டிக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தையும் கொண்டு வர வேண்டும்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசு 8 கிராம் தங்க காசு. இரண்டாம் பரிசு 6 கிராம் தங்க காசு. மூன்றாம் பரிசு 4 கிராம் தங்க காசு. போட்டியில் கலந்து கொள்கிறவர்களில் பலருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் அமைந்துள்ள தினத்தந்தி மையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்திட வேண்டும். ஓவியப் போட்டிக்கு பிரபல ஓவியர் ஸ்யாம் நடுவராக இருப்பார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை (மே 3-ந்தேதி) கோலப்போட்டி நடக்கிறது. இதில் 15 முதல் 30 வயது வரையுள்ள பெண்கள் கலந்துகொள்ளலாம். இதற்கு டாக்டர் எம்.லதாராணி நடுவராக இருப்பார்.
மே மாதம் 10-ந் தேதி கைகளில் மெகந்தி தீட்டும் போட்டி நடக்கிறது. பிரபல விமான பணிப்பெண் பயிற்சியாளர் எம்.ஹசீனா சையத் நடுவராக இருப்பார். இந்த போட்டியில் 15 முதல் 35 வயது வரையுள்ள பெண்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லலாம்.
மே 17-ந்தேதி லட்சிய தம்பதிகள் போட்டி நடக்க இருக்கிறது. இதற்கு பிரபல டாக்டர்கள் டி.காமராஜ் மற்றும் கே.எஸ்.ஜெயராணி ஆகியோர் நடுவராக இருப்பார்கள்.
இந்த போட்டியில் 21 முதல் 35 வயது வரையுள்ள தம்பதிகள் கலந்து கொள்ளலாம். மே 24-ந்தேதி வினாடி-வினா போட்டியும், மே 31-ந் தேதி புதையல் வேட்டை போட்டியும் நடக்க இருக்கிறது. போட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு நுழைவுக் கட்டணம் திரும்பத்தரப்படும்.