சென்னையில் இருந்து காட்பாடி வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், முருக கடவுளின் அறுபடைவீடுகளான திருத்தணி, சுவாமிமலை, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், சென்னை- திருச்செந்தூர் ரயிலில் பயணிகள் நெரிசலை தவிர்க்கவும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்ட்ரலில் இன்று (27ம்தேதி) முதல் அக்டோபர் 26ம் தேதி வரை 3 மாதங்களுக்கு திங்கள், சனிக்கிழமைகளில் திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் (எண் 0659) சென்னையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூரை அடையும்.
அதேபோல், திருச்செந்தூரில் இருந்து நாளை(28ம் தேதி) முதல் அக்டோபர் 27ம் தேதி வரை செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் சென்ட்ரலுக்கு இயக்கப்படும். இந்த ரயில் (எண் 0660) திருச்செந்தூரில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்ட்ரலை அடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, செய்துங்கநல்லூர், நாசரேத், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.