இந்த கோடையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பே குற்றால அருவியில் தண்ணீர் கொட்டத் துவங்கிய நிலையில், நேற்று குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜுன், ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் நீர்வரத்து இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை குளிர்ந்த காற்றுடன் விட்டு, விட்டு பெய்யும். அதனால், இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். குற்றாலம் மலையில் ஆயிரக்கணக்கான மூலிகை செடிகள் உள்ளன. இந்த செடிகளின் மீது அருவி நீர் தவழ்ந்து வருவதால் குற்றாலம் அருவிகளுக்கு மருத்துவ குணம் உள்ளது.
இதனால் இந்த சமயங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்துவிட்டுச் செல்வார்கள்.
அதன்படி குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. மேலும், குளிர்ந்த காற்று வீசி தட்பவெப்ப சூழ்நிலையை இதமாக்கியது.
மலைப் பகுதிக்குள் மழை பெய்ததால் முக்கிய அருவி, ஐந்தருவி, புலிஅருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நேற்று அதிகாலையில் இருந்து தண்ணீர் வரத்து மிகவும் அதிகமானது. முக்கிய அருவியில் பாதுகாப்பு வளைவு மீது தண்ணீர் விழுந்தது.
ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. நேற்று பகல் ஐந்தருவியில் பழுப்பு நிறத்தில் தண்ணீர் விழுந்தது. பகல் 12 மணிக்கு பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் காணப்படுகிறது.
நேற்று குற்றாலத்தில் செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகிய அருவிகளை தவிர மற்ற அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் போக்குவரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.